Followers

Friday, July 30, 2021

 

எட்டாம் அதிபதி தரும் வீபரீத ராஜயோகம்! - க. காந்தி முருகேஷ்வரர்



ட்டாமிடம் என்றாலே நஷ்டம், கஷ்டத்தைக் குறிப்பிடும் இடம்தான். அஷ்ட மாதிபதி எந்த இடத்தில் நிற்கிறதோ அந்த இடத்தை பாதிக்கும். எட்டாமதிபதி 3, 6, 8, 12 ஆகிய இடங்களில் நிற்பது மட்டுமே சிலருக்கு விபரீத ராஜயோகத்தைத் தரும். ராஜயோகம் என்றால், எல்லாம் இருந்தும் எதையும் உருப்படியாக அனுபவிக்க முடியாது. ஆனால் நான்கு பேர் ஜாதகரைப் பார்த்து, "அவருக்கென்னப்பா' என சமூக அந்தஸ்தைத் தருவதுதான் ராஜயோகம்.

அனுபவிக்கவேண்டிய வயதில் கிடைக்காமல், முடியாத காலங்களில் ஜாலவித்தை தருவது தான் ராஜயோகம். பிறந்ததற்கு ஏதாவது சாத னை செய்யவைப்பதே விபரீத ராஜயோகம்.

எந்த யோகமும் இல்லாதவர்களே பெரும்பாலும் நிம்மதியாக- சராசரி மனித வாழ்க்கையை வாழ்கிறார்கள். நாம் எவ்வளவு பெரிய சாதனையாளனாக இருந்தாலும், குடும்பத்தில் இருப்பவர்கள்கூட காலப் போக்கில் சாதனைகளையும், சாதனையாளரையும் மறந்தே போய்விடுவார்கள். எதுவும் நிலையில்லா வாழ்க்கையில், கிடைக்கும் நாளைய விதியை ஏற்று வாழ்ந் தால்தான் சந்தோஷமாக வாழமுடியும். எதிர்பார்ப்புகளே ஏமாற்றத்திற்கு முதல் காரணம். வெற்றியைப்போல தோல்விகளும் நிரந்தரமானவையல்ல. இருப்பதில் சுகம் காண்பதே நல்வாழ்க்கை. நஷ்டம், கஷ்டமெல்லாம் மனம் நினைத்தால்தான். ஆழ்மனதை, அதன் எண்ணம், செயலைக் குறிப்பதும், அதனை மாற்றுவதும் ஜாதகரின் எட்டாமிட வலுத்தன்மையைப் பொருத்தே இருக்கும்.

மனிதனின் ஆயுளைத் தீர்மானிக்கும் மிக முக்கிய இடமான எட்டாமிடத்தை அறிய, ஜாதகரின் எட்டாமிட அதிபதி எந்தெந்த இடத்தில் இருந்தால் என்னென்ன பலன் தரும் என்பதில் அடங்கியுள்ளது. இனி எட்டாமதிபதி நிற்கும் இடங்களின் பலன்களைக் காணலாம்.

ஒன்று

பிறந்ததிலிருந்து தொல்லைகளை அதிகம் சந்தித்திருப்பவர். குடும்பத்தில் ஜாதகர் அல்லது யாராவது நோய், எதிரி, கடனால் அவதிப்பட்டுக்கொண்டே இருப்பர். எந்த காரியத்தை எடுத்தாலும் எதாவதொரு தடை வரும். முன்னோர்கள் சொத்துகளைப் பாதுகாக்கத் தெரியாதவராக இருப்பார். எட்டாமதிபதியுடன் பாவகிரகப் பார்வை, இணைவு, 6, 12-க்குரியவர்களும் இணைந் தால் இந்த ஜென்மமே போராட்டம்தான். ஆரோக்கியக் குறையையும், தோல்விகளை யுமே அதிகம் சந்திக்க வேண்டியதாக இருக்கும். சனி பலம்பெற்றால் ஏதாவது உடல் ஊனம் அல்லது அழகற்ற தோற்றத்தையும் தந்துவிடும். ஆயுள் குறைவு, வறுமையை அதிகம் சந்திக்க வேண்டியதிருக்கும். சர்ப்ப கிரகம் வலுத்தால் மருத்துவமனை, சிறைச்சாலையில் வாழ்நாளைக் கடத்த நேரும். எட்டாமதிபதி தசை வராமல் இருத்தல் நல்லது. சுப பலம்பெற்றால் அதிக முயற்சியில் ஜீவன பலனுண்டு. நினைத்தபடி வாழ்க்கை இருக்காது.

இரண்டு

எட்டாமதிபதி லக்னத்திற்கு இரண்டில் இருந்தால் வாய்ப் பேச்சால் வம்பு வளர்க்கும். குடும்ப ஸ்தானம் என்பதால், குடும்பத்தில் ஏதாவது தொல்லை வந்துகொண்டே இருக் கும். ஏதோ செய்வினை வைத்ததுபோல் எடுத்த காரியம் அனைத்தும் தாமதமாகவே நடக்கும். அவ்வப்போது மனச்சோர்வு, விரக்தி வந்துவிடும். கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி மனஸ்தாபம் ஏற்படும். யாருக்கு வாக்கு கொடுத்தாலும் காப்பாற்ற முடியாது. தன ஸ்தானத்தில் எட்டாமதிபதி இருப்பது, பணத்தால் பிரச்சினை, பணமே பிரச்சினையாய் நிற்கும். கல்வித் தகுதிக்குக் கீழான வேலை, உண்மை, உழைப்பு இருந்தாலும் அதற்கான கூலி, அங்கீகாரம் இல்லாத நிலை யைத் தரும். பேச்சில் கண்டிப்பும், கடுமையும், கெட்ட வார்த்தைகளும் உபயோகிப்பர். குத்திக்காட்டிப் பேசுவது, சந்தேக புத்தி, சபல புத்தியைத் தந்து துன்பத்தை அதிகம் சந்திக்கவைக்கும். கையில் பணம் தங்காது.




கஞ்சனாக இருந்தாலும் மிச்சம் வைக்க முடியாது. பணவரவு தேவையைவிட குறை வாகவே இருக்கும். சேமித்தல் குறைவாகும்.

கல்வியில் தடை ஏற்படும்; கல்வியில் ஊக்க மிருக்காது. சுப பலம்பெற்றால் டிப்ளமோ படிப்பர். கண் நோய், உடல்நலக்குறை அடிக்கடி நேரும். சம்பாதிக்கும் நேரத்தில் உடல் ஒத்துழைப்பின்றி பலவீனப்படுவர். என்றாலும் படிப்படியாய் முன்னேறி பெரிய இடத்தை அடைவர்.

மூன்று

சகோதர ஸ்தானம் என்பதால் அவர் களுடன் ஒற்றுமையாய் இருக்கவிடாது. காரணமே இன்றி பேசமாட்டார்கள். ஜாதகருக்கு நேர்மையாய் கிடைக்கவேண்டிய பெற்றோர் சொத்துக்களைக்கூட உடன்பிறந் தோர் பறித்துக்கொள்வர். நன்றிகெட்ட சகோதரர்களே அமைவர். தைரிய ஸ்தானம் என்பதால், வெளியே தைரியசாலிபோல காட்டிக்கொள்ளும் பயந்த சுபாவம் கொண்டவர். பயத்தை மறைக்க அதிக சப்தமிடுவார். காது சம்பந்தப்பட்ட நோய் உண்டாகும். எட்டாமதிபதி தசாபுக்திகள் நோயால் அவதிப்பட வைக்கும். பாவகிரகப் பார்வை, சேர்க்கை கெடுபலனை அதிகப் படுத்தும். கற்பனையால் பாதிப்பு உண்டாகும். எட்டாமதிபதி இன்னொரு மறைவிட அதிபதியான மூன்றாமிடத்தில் வருவது விபரீத ராஜயோகத்தைத் தரும் என்பார்கள். லக்னாதிபதிக்கு எதிரி கிரகமாக இருந்து, அந்த பாவகிரகம் மூன்றா மிடத்தில் நின்றால் தீமையான பலன்கள் குறையும். மற்றபடி கெடுபலனைத் தான் அதிகம் செய்யும். சுப கிரகப் பார்வைகள் பாக்கியத்தை தடையுடன் தரும். நிறைய சிரமங்களை உடன்பிறந்தவர் களால் அனுபவிப்பர்.

நான்கு

எட்டாமதிபதி நான்காமிடமான தாயார் ஸ்தானத்தில் அமர்வது தாயாரை பாதிக்கும். தாயாருக்கு உடல்நலக் கோளாறு, அவ மானம், தன்மான இழப்பு, தாயார் பிரிவு, தாயார் எதிரியாவது, தாயாருக்கு எதிரியால் தொல்லை ஏற்படுவது, தாயாருக்கு கடனால் அவதி போன்றவற்றைத் தரும். தாய்மாமன், தாயார் ஆதரவு கிடைக்காது. சொல்லமுடியா வேதனையைத் தாயாருக்கு ஏற்படுத்தும். சுக ஸ்தானம் என்பதால் ஜாதகர் வாழ்க்கையில் எப்போதும் தொல்லைகள் இருக்கும். சுகத்தை முழுமையாக அனுபவிக்க விடாது. ஒரு சந்தோஷம் வந்தால் பத்து கஷ்டம் வந்து சந்தோஷத்தை அனுபவிக்க முடியாமல் செய்யும். ஏதாவது தடை, மனக் குழப் பத்தைக் கொடுத்து நிம்மதியிழக்கச் செய்யும். வீட்டைக் குறிக்கும் இடமாதலால் ஜாதகர் பெயரில் எந்த சொத்துகள் இருந்தா லும் வீண் விரயம், வில்லங்கம் ஏற்படும். பிடிக்காத வீட்டில் குடியிருத்தல், சுற்றுப் புற சுகாதாரமில்லாத, பாதித்த வீடு அமையும்.

வீட்டின் பெயரில் கடன் உண்டாக்கும். வாகனம் சரியாக அமையாது. வாகன விபத்து ஏற்படும். சுபகிரகம் சம்பந்தப்பட்டால் கட்டிய வீடு, பழைய வாகனம் கிடைக்கும். நிலம், வீடு, வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். உறவினர் ஸ்தானம் என்பதால் நல்ல உறவுகள் அமையாது. உறவினரால் தொல்லை, உறவுகளால் நீதிமன்ற வாசல் ஏறவேண்டி இருக்கும். பொறாமைகொண்டு கெடுக்கும் சொந்தங்களே இருப்பர். சுபகிரகப் பார்வை, இணைவு, நல்ல தசைகளில் ஓரளவு நற்பலன் கிடைக்கும்.

ஐந்து

எட்டாமதிபதி ஐந்தில் இருந்தால் பூர்வ புண்ணியம் கெட்டுவிட்டதென சொல்லிவிடலாம். பல தலைமுறையாய் வாழ்வாங்கு வாழ்ந்த பரம்பரையில் இருக்கும் பூர்வீக சொத்துகள் ஜாதகருக்குப் பலன் தராது. பங்காளிகள் செய்வினை வைத்தல், குல தெய்வத்தைப் பழித்தல், குலதெய்வம் செயல்படாதபடி கட்டுப்போட்டு வைத்திடு வர். அதனால் குலதெய்வத்தைக் கும்பிட்டும் பலனில்லாமல் இருக்கும். சிலர் குலதெய்வம் யாரென்று தெரியாதபடி பரதேசம் சென்றிருப்பர். பரம்பரை பரம்பரையாய் புத்திரதோஷம் பெறுவர். குழந்தை பிறக் காமல் இருத்தல், குழந்தை ஊனமாகப் பிறத்தல் போன்றவை நிகழும். சுபகிரகப் பார்வை பெற்றால் பாதிப்பிருக்காது. அதே வேளையில் பிள்ளைகளால் அவமானம், தொல்லை அல்லது கடைசி காலத்தில் பிள்ளைகளுடன் வசிக்கமுடியாத நிலையைத் தரும். பிள்ளைகள் இருந்தும் பயனற்ற தாகவே இருக்கும். சொந்தபந்தம் பகையுடன் இருப்பர். சுப ஸ்தான கிரகம் எட்டாமதி பதியுடன் சேர்ந்தால் அந்த ஸ்தானம் பாதிக்கப்படும். குறிப்பாக இரண்டாமதிபதி சேர்ந்தால் குடும்பம் கெட்டுவிடும். சுபகிரகம் பலம்பெற்றால் ஓரளவு தீமை குறையும். எட்டாமதிபதியுடன் எந்த இடத்தில் ராகு- கேதுக்கள் இணைந்தாலும் சுபப் பலனைக் கெடுக்கும்.

ஆறு

எட்டாமதிபதி ஆறில் நிற்பது விபரீத ராஜயோகமே. அதாவது மறைவிட அதிபதி இன்னொரு மறைவிடத்தில் மறைவது சிறப்புதான். அதில் பாவகிரகம், லக்னத்திற்கு எதிரி, கெடுதலான கிரகம் இணைந்தாலும் கெடுபலன் நிறைய குறைந்துவிடும். வாழ்க்கையில் நன்மை நடப்பதைவிட, தீமை குறைந்தோ, தீமை இல்லாமலோ இருந்தாலே யோகம்தான். கெட்ட எண்ணம் அதிகம் கொண்டவர். கெட்டவன் கெட்ட கிரகமாகிக் கெட்டால் கிட்டுவது ராஜயோகம்தான். அதன்படி நல்ல வருமானம், அந்தஸ்து, புகழ் என திடீர்திடீரென ஏற்படுத்தும். செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும். நல்லவனுக்குக் கிடைக்கவேண்டிய அனைத்து மரியாதையும் இவர்களுக்கும் கிடைக்கும். நேர்வழியில் செயல்படாமல் தந்திரமாக செயல்படுவர். ஏதாவது நோயால் அவதிப்படுவர். புத்திர தோஷம் உண்டாகும். ஜாதகருக்கே ஆச்சரியம் தரும் நிகழ்வுகள் வாழ்க்கையில் நடக்கும். ஆனாலும் நல்லவழியில் அனைத்தும் கிடைக்காது. ஏதாவது குறை இருந்துகொண்டே இருக் கும். அனைத்தும் கிடைப்பதுபோல் காவல் நிலையம், நீதிமன்றம், சிறை செல்வது சர்வசாதாரணமாக இருக்கும். பணம் இருக்குமளவு நிம்மதி இருக்காது. உடன் இருப்பவர்களால் வஞ்சிக்கப்படுவர். நோயால் பாதிக்கப்படுவர். பிரச்சினையில் சிக்கிக்கொண்டால் அதுவரை புகழ்ந்தவர் களே, "இவன் பண்ணதுக்கு அனுபவிக்கிறான்' என சொல்வார்கள்.

ஏழு

எட்டாமதிபதி ஏழில் நின்றால் களத்திர பிரச்சினை வரும். துணைவர் திருமணத்திற்கு முன்பு உடல் ஆரோக்கியத்தோடு நன்றாக இருந்தாலும், திருமணத்திற்குப்பின்பு படாதபாடு படுவார். சம்பாதிக்கும் வருமானம் துணைவரின் மருத்துவச் செலவுக்குப் போதாது. போராட்டமான இல்வாழ்க்கையே இருக்கும். வருமானமின்றி அவதிப்படுவார். அதனால் கணவன்- மனைவிக்கிடையே நல்ல உறவு இருக்காது. ஊருக்கு கணவன்- மனைவியாக வாழ்வர். சிலர் இன்னொருவருடன் மறைமுக வாழ்க்கையை வாழ்வர். சந்தேக புத்தியால் துணைவரைப் பிரிவர். சிலர் இருக்கும் கொடுமையான வாழ்க்கையைவிட்டு வரமுடியாமலும், புதிய நல்வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியாத சூழ்நிலை யிலும், வாய்ப்பு கிடைத்தும் பயன்படுத்த முடியாத சூழலும் அமைந்து தவிப்பர். அடிக்கடி நோய், கடனால் அவதிப்படுவர். மனைவிமேல் அன்பு செலுத்தமாட்டார். குறைகூறிக்கொண்டே இருப்பார். மனைவிக்கு அற்ப ஆயுள் தரும். பிற பெண்களை நம்பி ஏமாறுவார். பெண்களால் கலகம், அவமானம், இகழ்ச்சி நஷ்டமே ஏற்படும். ஏழாமிடம் தொழில்வகை நண்பர்களைக் குறிக்கும் இடமென்பதால், நல்ல நண்பர்கள் அமைய மாட்டார்கள். துரோகிகள் அமைவர். கூட்டுத்தொழில் செய்தால் கூட்டாளிக்கே நன்மை அதிகம். கூட்டாளி லாபத்தை வைத்துக் கொள்வார் அல்லது நஷ்டக் கணக்கு காட்டி தொழிலி- ருந்து ஜாதகரை விலகவைத்து விடுவார். அதனால் நண்பர்களுக்காக விட்டுக் கொடுக்கவேண்டி வரும். நல்லவர்கள் உறவு கிடைப்பது அரிதாக இருக்கும். தனிமையே இவர்களுக்குத் துணை.

எட்டு

எட்டாமதிபதி எட்டில் இருப்பது, தான் நினைத்ததை உடனே செய்யவேண்டும் என்னும் எண்ணம் கொண்டவராக்கும். யாரையும் கலந்தாலோசிக்காமல், தனக்கு எல்லாம் தெரியுமென்னும் கர்வத்துடன் செயல்பட்டு நஷ்டமடைபவர்களில் பலருக்கு எட்டாமதிபதி எட்டில் ஆட்சியாக இருக்கும். சுபகிரகப் பார்வையானது குறைந்த நஷ்டத்தைத் தரும். பாவகிரகம் வலுப்பெற் றால் இருப்பதை இழந்து நிற்பர். பாதக தசை நடந்தால் தெருவுக்கு வந்துவிடுவர். மாரக தசாபுக்தி நடந்தால் தற்கொலையும் செய்துகொள்வர். சுப பலம், ஆயுள் பலம் இருக்குமே தவிர நன்மைகள் குறைவாகவே நடக்கும். வாழ்க்கையில் ஏதாவது போராட் டங்கள் இருந்துகொண்டே இருக்கும். இருப்பதைத் தக்கவைக்கத் தெரியாத முட்டாளாக இருப்பார். சொல்லித் திருத்த முடியாது. சுபகிரக பலத்தால் பட்டுத் தானாகத் திருந்துவார். அஷ்டமாதிபதி லக்னத்திற்கு நட்பு கிரகமாக இருந்து, லக்னாதிபதிக்கு நட்பு கிரகத்துடன் இணைவு பெற்று, ஆட்சி, உச்சமடைந்து சுபத்தன்மை பெற்றால் விபரீத ராஜயோகம் தருகிறது. பெயர், புகழ், அந்தஸ்தை யாரும் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராமல் தந்து ஆச்சரியப்படுத்தும். அவ்வளவுதான் என நினைக்கும் நேரத்தில் இழந்ததைத் திரும்பப் பெறுவர். திடீர் அதிர்ஷ்டம் திக்குமுக்காட வைக்கும். ஏற்கெனவே பட்டதை நினைத்து வாழ்ந்தால் பாதிப்பு இருக்காது. முதல் பாதியில் கஷ்டப்பட்டு வாழ்நாள் முழுவதும் கஷ்டமின்றி சுகவாசியாய் இருப்பர்.

ஒன்பது

எட்டாமதிபதி ஒன்பதில் இருப்பது தந்தைக்கு சோதனை பல ஏற்படுத்தும். தந்தையால் வாழும் வயதில் வாழமுடியாது. தந்தைக்கு ஆயுள் பலவீனமான ஜாதகமாக இருந்தால் தந்தையின் ஆயுளையே பாதித்துவிடும். ஆயுள் நன்றாக இருந்தால் தாயைவிட்டு இன்னொரு பெண்ணை மணந்து விலகிவிடுவார் அல்லது இன்னொரு பெண்ணோடு தொடர்பில் இருப்பார். தாய்- தந்தைக்குள் அடிக்கடி சண்டை, சச்சரவு உண்டாகும். சிலருக்கு தந்தையால் பாதிப்பு, தந்தைக்கு பாதிப்பைத் தந்துவிடும். தந்தைக்கு எதிராக, எதிரியாகக்கூட ஜாதகர் இருப்பார். சுபகிரக இணைவு, பார்வையைப் பொருத்து பாதிப்பு குறையும். சில ஜாதகர்கள் தாய்- தந்தையைப் பிரிந்து வாழநேரும். தந்தைக்கு நோய், எதிரி, கடனால் பாதிப்பு ஏற்படும். தந்தைவழி சொத்துகளில் வில்லங்கம் ஏற்படும். முறையாகக் கிடைக்கவேண்டிய தந்தைவழி சொத்துகள் கிடைக்காது அல்லது இல்லாமல் போய்விடும். மேலும் புத்திரதோஷம், புத்திரர்களால் தொல்லையை அனுபவிக்க நேரும். தந்தையால் அல்லது மகனால் ஜாதகருக்கு ஏதாவது பிரச்சினை வந்துகொண்டே இருக்கும். கடவுளை வேண்டி, வேண்டியபடி நடக்காததால் விரக்தியால் "கடவுள் இல்லை' என நாத்திகம் பேசுவர். ஆன்மிகத்தையே வெறுப்பர். தன்னுடைய மதத்தின்மீது பற்றில்லாதவராகவும், கொண்டாட்டங்களை விரும்பாதவராகவும் இருப்பர். பிறருக்காக வாழாமல் தான் நினைத்தபடி வாழ்வர்.

பத்து

தொழில் ஸ்தானமான பத்தில் எட்டாமதிபதி நின்றால் தொழிலைக் கெடுப்பார். சரியான தொழில் அமையாது. படித்த கல்விக்கேற்ற வேலை, உழைப்பிற் கேற்ற ஊதியம், முறையான மரியாதை எதுவும் கிடைக்காமல் தொழிலால் அவமானப் படுவார். எவ்வளவு முயற்சித்தாலும், விழிப்போடு இருந்தாலும் தொழிலில் நஷ்டமடைவார். அதனால் குடும்ப உறுப்பி னர்கள், மனைவி, மாமியார், சொந்த பந்தத்தால் அவமானப்படுத்தப்படுவார். நிலையான தொழில், ஒரே தொழிலில் இருக்கமாட்டார். எதிலாவது சாதிக்க நினைத்து அடிக்கடி தொழில் மாற்றம் செய்வார். அல்லது ஒரே தொழிலில் இருக்கமுடியாமல் பணிநீக்கம் செய்யப்படுவார். அரசாங்கத்தால் கண்டிக்கப்படவும், தண்டிக்கப்படவும் நேரும். பெரிய மனிதர்களுடன் மோதல், பிரச்சினை ஏற்படும். யாரையும் எளிதில் பகைத்துக்கொள்வார். நாணயமாக நடந்துகொள்ளமுடியாது. எடுத்த காரியம் அனைத்தும் மந்தமாகவே நடைபெறும். பாவகிரகப் பார்வை, சம்பந்தம் பெற்றால் அவதிகள் பலவுண்டு. கூட்டுத்தொழில் நஷ்டத்தைத் தரும். முன்னேற முடியாமல் புலம்புவர். சுப பலம்பெற்றால் சொந்தத் தொழில் செய்யமாட்டார்கள். அடிமைத் தொழிலில் கிடைப்பதை வைத்து வாழ்வர். படிப்படியாகத் தொழிலில் முன்னேற்றம், பணி உயர்வு கிடைக்கும். சுபகிரக இணைவு, பார்வை பெற்ற சிலர் சிறிய அரசு சார்ந்த தொழிலில் சுமாரான வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருப்பர்.

பதினொன்று

மூத்த சகோதர வர்க்கத்தினரால் தொல்லைகள் பல அனுபவிப்பர். தனக்கு வரவேண்டிய லாபத்தைப் பறிக்கும் மூத்த சகோதரர்கள் அமைவர். ஜாதகரின் முன்னேற்றம், லாபத்தை உடன்பிறந்த வர்களே உடனிருந்து கெடுப்பர். சிலருக்கு அதிர்ஷ்டவசமாக மூத்த சகோதரர்கள் இருக்கமாட்டார்கள். இருந்தால் அற்ப ஆயுள் ஏற்படும் அல்லது தொல்லையே அதிகம் நடக்கும். நண்பர்களையும் குறிக்குமிடம் என்பதால் நண்பர்களால் நஷ்டம் ஏற்படும். பதினோராம் இடம் மூத்த சகோதரர்களைக் குறிப்பதுபோல், ஜாதகரைவிட மூத்த வயது நண்பர்களையும் குறிக்கும். மூத்தவர்கள் சரியான ஆலோசனை வழங்கமாட்டார்கள். முன்னேறிவிட்டால் நம்மை மதிக்கமாட்டான் என நினைத்து நல்ல ஆலோசனைகள் வழங்கமாட்டார்கள். கஷ்டப்படுவதை மறைமுகமாக ரசித்து, ஒப்புக்கு ஆறுதல் சொல்வார்கள். முதியோர்கள், மூத்த சகோதரர்கள், மூத்த நண்பர்களால் அன்பைவிட ஆபத்தே அதிகமாய் இருக்கும். நன்மை நடப்பதைக் கெடுப்பதே உடன்பிறந்த வர்களும் உடன் இருப்பவர்களும்தான் என்பதை காலம்தாழ்ந்தே உணர்வர். வரும் லாபம் எல்லாவற்றையும் அஷ்டமாதிபதி வீண்செலவு செய்யவைப்பார். புத்திரர்களால் லாபம் உண்டாக்குவார். நேர்வழியில் லாபம் தராமல் குறுக்கு வழியில்தான் அதிக லாபத்தைத் தருவார். பல வழிகளில் மறைமுகமானவையே பணத்தைத் தரும். சுபகிரகப் பார்வைகள் தண்டனையின்றி, சோதனைதந்து காப்பாற்றும். பாவகிரகப் பார்வை, இணைவு தவறான வழிக்குச் சென்று அரசாங்க தண்டனையைக் கொடுத்து விடும்.

பன்னிரண்டு

இன்னொரு மறைவிட ஸ்தானமான பன்னிரண்டில் எட்டாமதிபதி நின்றால் வீணான விரயச் செலவுகளைத் தரும். புத்திர தோஷம் உண்டாக்கும். சொந்த ஊரைவிட்டு வெளிநாட்டு வாழ்க்கையைத் தரும். பயணங்களால் பெரிய நன்மைகள் இன்றி மன நிம்மதியைக் கெடுக்கும். காலம் முழுவதும் பிறருக்காக அலைந்து திரிந்து நஷ்டத்தை அடைவார். உண்மையான வேலைக்காரனாக இருப்பார். ஆனால் நிலையான லட்சியம் இல்லாதவர். சட்டத்திற்குப் புறம்பான காரியங்களில், சட்டத்திற்கு எதிராக செயல்படுவார். பலருடன் பழகி, பலரால் ஏமாற்றப்பட்டு, பலவித நஷ்டத்தையும் கஷ்டத்தையும் ஆரம்ப காலங்களில் அனுபவிப்பார். பிறகு சுதாரித்து தன்னை மாற்றிக்கொள்வார். பாவ கிரகம், கெட்டவர், இன்னொரு கெட்ட இடத்தில் நின்று விபரீத ராஜயோகம் தந்து, துணிந்து தீய காரியங்களில் ஈடுபட்டு பணம்சேர்க்கத் தூண்டுவார். திடீர் புகழ், அந்தஸ்து கிடைத்துவிடும். விபரீத ராஜயோகம் என்பது யாரும் நினைத்துப் பார்க்காத வளர்ச்சியைத் தந்துவிடும். அஷ்டமாதிபதி பன்னிரண்டில் இருப்பது கண்டிப்பாக நல்லவழியில் பெரிய வளர்ச்சியைத் தராது. கடல்கடந்து செல்வது, வேற்று மதம், இனம், மொழி, நாட்டைச் சேர்ந்தவர்களால் லாபத்தைத் தரும். மக்களுக்குப் பயன்தராத, மக்களுக்கு பாதிப்பு தரக்கூடிய பொருட்களை முறையற்ற வகையில் கையாண்டு பணம் சம்பாதித்து சொகுசு வாழ்க்கையைப் பெறுவார்.

பரிகாரம்

எட்டாமிடம், அஷ்டமாதிபதி எப்போதும் ஜாதகருக்கு நன்மைகள் செய்யமாட்டார். நின்ற வீட்டையும் கெடுப்பார். ஆதலால் அதற்குரிய தசாபுக்திகள் நடக்கும்போது அதிக கவனமாக இருத்தல்வேண்டும். நேரமறிந்து சுபச் செலவுகள் செய்துகொள்ளுதல் நன்மை தரும். சுய ஜாதகத்தில் சுபகிரகங்களைக் கண்டறிந்து அதனை வலுப்படுத்திக்கொண்டால் தீமைகளைக் குறைத்து நன்மைகளை அடையலாம்.

செல்: 96003 53748
courtesy; Nakkiran/balajothidam tq

============================

 

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...