முதியோர் காதல்!
பாவேந்தர் பாரதிதாசன் படைத்த காவியங்களில் கலங்கரை விளக்காகத் திகழ்வது குடும்ப விளக்கு! இக்காவியத்தின் தலைவி தங்கம், பெயருக்கேற்றபடி குணமும் வாய்த்தவள்! அவளும் அவள் அன்புக் கணவன் மணவழகனும் இளமையில் நடத்தும் இல்லறத்தை மிகவும் இரசனையோடு விவரிக்கும் பாவேந்தர், பின்பு அவர்களுடைய பிள்ளைகளான வேடப்பனும், வெற்றிவேலும் வளர்ந்து வாலிபர்கள் ஆவது, அவர்களுடைய திருமணம் என ஒரு குடும்பம் சந்திக்கின்ற எல்லா வாழ்வியல் நிகழ்வுகளையும் இக்காவியத்தில் விரிவாகவே பேசுகிறார்.
குடும்ப விளக்கின் எல்லாப் பகுதிகளும் ஒளிமிகுந்தவையே! எனினும் மிகச் சிறந்த பகுதியாக – பொதுவாக மற்ற கவிஞர்கள் புனையாத காதல் பகுதியாகச் சுடர்விட்டுப் பிரகாசிப்பது காவியத்தின் இறுதிப் பகுதியான ’முதியோர் காதல்!’
மணமான புதிதில் புதுமணத் தம்பதியர் எவ்வாறு ஒருவர்மீது மற்றொருவர் அன்பும், காதலும் கொண்டிருப்பரோ அதனினும் அதிகமான அளவு அன்பும் காதலும் கொள்வதென்பது நூறு வயதிலும் சாத்தியமே என்பதை விளக்கும் ஓர் அற்புதப் பகுதி இது!
மிகவும் தள்ளாத முதியவர்களாகிவிட்ட தங்கமும், மணவழகனாரும் தங்கள் மூத்த பிள்ளையான வேடப்பனோடு வாழ்ந்து வருகின்றனர். மருமகளும் பேரப்பிள்ளைகளும் அவர்களை மிகவும் அன்போடும் பரிவோடும் பேணிவருகின்றனர்.
தங்கள் இல்லறக் கடமைகளைச் சரிவரச் செய்துவிட்ட மகிழ்ச்சியில் தங்கமும் மணவழகரும் பேசிக்கொள்வதை நாமும் சற்றுக் கவனிப்போம்…
”பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுத்தோம்; சுற்றத்தார்க்குச் செய்ய வேண்டுவனவற்றைக் குறைவறச் செய்தோம்; நம் வாழ்க்கையில் ஒருநாளும் வாய்மை தவறியதில்லை; நாட்டின் நலத்திற்காக இயன்ற அறங்களைச் செய்தோம்; யாருக்கும் சிறிய தீங்கும் செய்தறியோம்; சின்னஞ்சிறு உதவியை யாரேனும் நமக்குச் செய்திருந்தாலும்கூட செய்ந்நன்றி மறந்தறியோம்!” என்பதாக நீள்கிறது அவர்களின் உரையாடல்.
இவ்வாறு மகிழ்வோடு உரையாடிய சிறிது நேரத்திலேயே மூதாட்டி தங்கம் சோர்ந்துபோய் கண்ணயர்கின்றாள்; மணவழகனாருக்கோ உறக்கம் வரவில்லை. அயர்ந்து உறங்குகின்ற தன் அருமை மனைவியையே பார்த்துக்கொண்டிருக்கிறார்
காலம் செய்த கோலத்தை வியந்தவராய்த் தனக்குள்ளே பேசிக்கொள்கிறார், “புத்தம் புதுமலர் மேனியள் அல்லள் இவள் இப்போது! காய்ந்த புற்கட்டைப் போல் ஆகிவிட்டது இவள் தேகம்! நடையா…இது நாட்டியமா என நான் வியந்த ஒய்யார நடையளுமல்லள்! நடக்கவே தடுமாறித் தள்ளாடிவிழும் மூதாட்டி! வதனமே சந்திர பிம்பமோ…என்று இவள் மதிமுகத்தைப் பார்த்து மதிமயங்கி ஒரு காலத்தில் நான் பாடியதுண்டு! ஆனால் இப்போது குழிவிழுந்த கண்களோடு வறண்ட நிலம்போல அந்த எழில்முகம் உருமாறிவிட்டது!” எனப் பெருமூச்செறிகிறார்!
“மேனியழகு குலைந்துவிட்ட இவளிடம் எதுதான் எனக்கு இன்பம் இப்போது?” என்ற கேள்வி பிறக்கின்றது அவருக்கு. ”இவள் இருக்கின்றாள் என்ற ஒன்றே!!” என்ற பதிலை அவர் ஆழ்மனம்….அன்பில் ஆழ்மனம் அவருக்குச் சொல்கின்றது. ”ஆமாம்…என் தங்கம் என்னோடு இன்னும் இருக்கின்றாள் என்றே ஒன்றே எனக்குப் போதும்!” என எண்ணியவராய், உறங்கும் மூதாட்டியைக் காதலோடு மீண்டும் பார்க்கிறார்; கண்கள் குளமாகின்றன அவருக்கு!
நமக்கும்தான்! 😥
புதுமலர் அல்ல; காய்ந்த
புற்கட்டே அவள் உடம்பு!
சதிராடும் நடையாள் அல்லள்
தள்ளாடி விழும்மூ தாட்டி!
மதியல்ல முகம் அவட்கு
வறள்நிலம் குழிகள் கண்கள்
எதுஎனக் கின்பம் நல்கும்?
’இருக்கின்றாள்’ என்பது ஒன்றே!
எவ்வளவு ஆழமான வாழ்க்கைத் தத்துவம் இதில் புதைந்துகிடக்கிறது! உண்மையான காதலைக் கணவனும் மனைவியும் உணருவதே முதுமைப் பருவத்தில்தான்!
உடல் மீது கொஞ்ச காலம் இளைப்பாறுகின்ற காதல் மனப்பக்குவம் வரவரக் காமக் கடலை நீந்திக் கரையேறி உள்ளமெனும் கோயிலில் குடியேறிவிடுகின்றது அமர காதலாய்!
’முதியோர் காதல்’ எனும் இப்பகுதி முதியோரின் காதலைச் சொல்வதாயினும் இளையோரும் படித்துப் பயன்பெறவேண்டிய ஒன்று! முதிய தம்பதியினரின் அன்பான, பண்பான இல்லறத்தை இளையோர் அறிந்துகொள்ளுதல் அவர்தம் இல்லற வாழ்வைச் செம்மையாய் நடத்த உதவும்.
அன்றைய கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையின் மிகப்பெரிய பலமே ‘வாழ்க்கைக் கல்வி’யை இளையோர், தம்முடன் ஒன்றாகவே இணைந்து வசித்துவந்த, பெற்றோரிடமும், ஏனைய பெரியோரிடமும் நேரடியாகக் கற்ற அனுபவமே!
இன்றைய நவீன உலகில் அது சாத்தியப்படாமல் போனது இளைய தலைமுறையினருக்குப் பேரிழப்பு என்றுதான் சொல்ல வேண்டும்!
’Nuclear Family’ என்று சொல்லப்படுகின்ற தனிக்குடும்ப அமைப்புமுறை நடைமுறைக்குவந்துவிட்ட இன்றைய சூழலில் முதிய இணையர் தம் வாழ்க்கை அனுபவங்களைச் சுவையாகப் பகிர்ந்துகொள்ளும் இப்பகுதி ’இல்லறத்தை நல்லறமாக்கும்’ வெற்றி ரகசியத்தை நமக்குச் சொல்லித் தருகின்றது!
வாழ்க்கை எனும் அனுபவக் கல்வியை ஏட்டின் மூலமாக அறிந்துகொள்ள வழிவகுத்த பாவேந்தரின் எழுத்துப் பணி போற்றத்தக்கது.
நன்றி;Ponidhazhl - Prabhulingam Rajavelan.
குடும்ப விளக்கு - One of the must-read books of Bharathidasan!
![](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t4c/1/16/1f642.png)
No comments:
Post a Comment