Followers

Sunday, December 12, 2021

========================================


கொஞ்சம் பொறுங்கோ......
இவர் குணத்தார் வார வரத்தைப் பார்த்தால், ஏதோ ரெசிபி கொண்டு வாறார் போல கிடக்கு....😁
போனைப் பார்த்து சிரித்துக் கொண்டு வாறார்..... மற்றக் கையில் முருங்கை இலையும் கிடக்குது....😄
நான் நினைச்சது சரிதான் பாருங்கோ😂
ஒரு ரெசிபியை கொண்டு வந்து சொன்னார் பார்க்க நல்லாயிருக் கும் போல கிடக்கப்பா. நல்லாயிருந்தா உம்மட முகநூல் நட்புகளுக்கும் போடுமன் செய்யட்டும் எண்டார்.😘
சொன்னமாதிரி நல்ல சுகமும், ருசியும் வாசமுமப்பா. 😋
நாங்கள் ரெண்டு பேர்தானே...!
1ம் படத்தில காட்டின மாதிரி,
ஒரு 4,5 நெட்டு முருங்கையிலை, ஒரு 1,2 பச்சை மிளகாய் 2 பல்லு உள்ளி 2 ஸ்பூன் சின்னச் சீரகம் எடுத்து மிக்சியில கொஞ்சம் தண்ணி போட்டு கூழா அரைச்சு, ஊத்தப் போற தோசை மவில.... 😊
2ம் படத்தில காட்டியிருக்கிறன் மாவில ஊத்தி உப்பு போட்டு நன்கு கலக்கி தோசை சுடுங்கோ.
நல்ல வாசமாய் இருக்குமப்பா. 😋
ஒரு கச்சல் கிச்சல் இருக்காது சரியோ....! கைக்குது எண்டு பொய் சொன்னியளோ எனக்கு கெட்ட கோவம் வரும் சொல்லிப் போட்டன். 😁 நான் ஒரு நாள் தோசையும், இன்னொருநாள் இட்லியும் ஊத்தினன். சும்மா அந்த மாதிரி இருந்ததப்பா. 👌
வெளிநாட்டில முருங்கையிலை கிடைக்குதோ தெரியேல்ல......
இலங்கை இந்தியாவில கிடைக்கும்.
செய்து பாருங்கோவன்😄😁
All reactions:
You, Arunthathy Gunaseelan, Subi Narendran and 103 others
tq Arunthathi.

==========================

காரமான மொறு மொறு மிளகு வடை செய்வது எப்படி? ஓட்டல் சுவையையும் மிஞ்சிய ருசி...................


மிளகு வடை உடலுக்கு மிகவும் நல்லது. ஓட்டல்களில் வாங்கி சாப்பிடுவதை காட்டிலும் வீடுகளில் செய்து சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கும்.

இனி எப்படி மிளகு வடை செய்வது என்று பார்க்கலாம்.

மிளகு வடை செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

  1. உளுந்தம் பருப்பு – 200 கிராம்
  2. அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
  3. மிளகு – 2 டேபிள் ஸ்பூன்
  4. சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன்
  5. பெருங்காயப் பொடி – சிறிதளவு
  6. நல்ல எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
  7. உப்பு – தேவையான அளவு
  8. கடலை எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

மிளகு வடை செய்முறை

உளுந்தம் பருப்பை முதலில் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.     

பின்னர் வடிகட்டில் உளுந்தம் பருப்பைச் சேர்த்து தண்ணீர் முழுவதையும் வடிகட்டவும்.  

 உளுந்தம் பருப்புடன் தேவையான உப்பினைச் சேர்த்து, தண்ணீர் சேர்க்கமால் அரைத்துக் கொள்ளவும்.  மிளகு, சீரகத்தை தனித்தனியாக தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்த உளுந்த மாவு, பொடித்த மிளகுப் பொடி, சீரகப் பொடி, அசிரி மாவு, பெருங்காயப் பொடி ஆகியவற்றை சேர்த்து ஒரு சேர பிசையவும்.

1 டேபிள் ஸ்பூன் நல்ல எண்ணெயை பிசைந்த உளுந்து கலவையில் சேர்த்து, நன்கு ஒருசேர பிசைந்து கொள்ளவும்.

உளுந்த மாவுக் கலவையிலிருந்து சிறிய எலுமிச்சையளவு மாவினை எடுத்து உருண்டையாக உருட்டவும். இவ்வாறு எல்லா மாவினையும் சிறுஉருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.   

வாணலியில் கடலை எண்ணெய் ஊற்றிக் காய விடவும். சதுர வடிவ வாழையிலை அல்லது பிளாஸ்டிக் கவரில் எண்ணெயைத் தடவிக் கொள்ளவும்.

அதில் உருட்டிய சிறிய உருண்டையை வைத்து வடையாகத் தட்டவும். வடையாக விரித்ததும் நடுவில் சிறுதுளையை இடவும்.  

 மாவினை காய்ந்த எண்ணெயில் போடவும். சுவையான மிளகுவடை தயார்.

courtesy;  https://manithan.com/article/ulunthu-vadai-milagu-vadai-food-1639268150?itm_source=parsely-api

Saturday, December 11, 2021

திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி நடனம் Thiruvempavai Thiruppalliyezhuchi...

திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி நடனம் Thiruvempavai Thiruppalliyezhuchi Nadanam - Thiruvasagam







Thirupalliyezhuchi Lyrics in Tamil / Thiruvempavai Lyrics and Meaning in Tamil

 

திருப்பள்ளியெழுச்சி  பாடல் வரிகள் (Thirupalliyezhuchi Lyrics) மாணிக்கவாசக சுவாமிகள் (இன்றைய ஆவுடையார் கோவில்) திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருந்தபோது, விடியற்காலத்தில் இறைவனைத் துயில் எழுப்புவதாகத் திருப்பள்ளியெழுச்சி என்னும் இதனை அருளிச் செய்தார். திருப்பள்ளியெழுச்சி 10 பாடல்கள் கொண்ட பாடல் வரிகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… திருப்பள்ளியெழுச்சி என்பது, ‘சுப்ரபாதம்’ என வடமொழியில் வழங்கும். வைகறையில்-அதிகாலைப் பொழுதில்- இருள்நீங்க ஒளி எழுவதுபோல, ஆன்மாக்களுடைய திரோதானமலம் அகல ஞானவொளி வெளிப்படுகின்ற முறைமையை இப்பாடல்கள் குறிக்கின்றன. மேலும், இது நம்முள் உறங்கும் இறைவனைத் துயில் எழுப்புவதுமாம்.

 

திருப்பள்ளியெழுச்சி பாடல் : 01

 

போற்றி ! என்வாழ் முதல் ஆகிய பொருளே! புலர்ந்தது ; பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு

ஏற்றிநின் திருமுகத்து எமக்கருள் மலரும் எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்!

சேற்றிதழ்க் கமலங்கண் மலரும்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!

ஏற்றுயர் கொடியுடையாய்! எனை உடையாய்! எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !

 

திருப்பள்ளியெழுச்சி பாடல்: 02

 

அருணன் இந்திரன் திசை அணுகினன்! இருள்போய் அகன்றது; உதயம் நின் மலர்த் திரு முகத்தின்

கருணையின் சூரியன் எழ எழ, நயனக் கடிமலர் மலர மற்றண்ணல் அங்கண்ணாம்

திரள் நிரை அறுபதம் முரல்வன ;இவையோர் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!

அருள் நிதி தரவரும் ஆனந்த மலையே! அலைகடலே பள்ளி எழுந்தருளாயே!

 

திருப்பள்ளியெழுச்சி பாடல்: 03

 

கூவின பூங்குயில்;கூவின கோழி; குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்;

ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து ஒருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத்

தேவ! நற் செறிகழற் றாளிணை காட்டாய்; திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!

யாவரும் அறிவரியாய்; எமக்கெளியாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !

 

திருப்பள்ளியெழுச்சி பாடல்: 04

 

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்! இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்;

துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்; தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்;

சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்; திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!

என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தரு ளாயே !

 

திருப்பள்ளியெழுச்சி பாடல்: 05

 

பூதங்கள் தோறும் நின்றாய்! “எனின் அல்லால் “போக்கிலன் வரவிலன்” என நினைப் புலவோர்

கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்

சீத்ங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா! சிந்தனைக் கும் அரியாய்!எங்கண் முன்வந்து

ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !

 

திருப்பள்ளியெழுச்சி பாடல்: 06

 

பப்பற வீட்டிருந் துணரும் நின் அடியார் பந்தனை வந்தறுத்தார் அவர் பலரும்

மைப்புறு கண்ணியர் மானுடத்தியல்பின் வணங்குகின்றார் அணங்கின் மணவாளா!

செப்புறு கமலம் கண் மலருந்தண்வயல் சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!

இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !

 

திருப்பள்ளியெழுச்சி பாடல்: 07

 

அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார் ;

இதுஅவன் திருவுரு,இவன் அவன் எனவே எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்

மதுவளர் பொழில்திரு உத்தரகோச மங்கையுள்ளாய்! திருப்பெருந்துறை மன்னா!

எது எமைப் பணிகொள்ளும் ஆறு?அது கேட்போம்; எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !

 

திருப்பள்ளியெழுச்சி பாடல்: 08

 

முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்! மூவரும் அறிகிலர் யாவர் மற்று அறிவார்?

பந்தணை விரலியும் நீயும் நின் அடியார் பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே!

செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித் திருப்பெருந்துறை யுறை கோயிலும் காட்டி

அந்தணன் ஆவதும் காட்டிவந்து ஆண்டாய்! ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!

 

திருப்பள்ளியெழுச்சி பாடல்: 09

 

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப் பொருளே! உனதொழுப் படியோங்கள்

மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே வண்திருப் பெருந்துறையாய் வழி அடியோம்

கண்ணகதே நின்று களிதரு தேனே! கடலமுதே!கரும்பே!விரும்படியார்

எண்ணகத்தாய்! உலகுக்கு உயிரானாய்! எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !

 

திருப்பள்ளியெழுச்சி பாடல்: 10

 

புவனியிற் போய் பிறவாமையின் நாள் நாம் போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி

சிவன் உய்யக் கொள்கின்ற வாறென்று” நோக்கித் திருப்பெருந் துறையுறைவாய்!திருமாலாம்

அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப் படவும் நின் அலர்ந்த மெய்க் கருணையும் நீயும்

அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்! ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே!

 

திருச்சிற்றம்பலம்

 

=======================================

Thiruvempavai Lyrics and Meaning in Tamil

திருவெம்பாவை (Thiruvempavai) என்பது மாணிக்கவாசகரால் சிவபெருமானைக் குறித்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். இந்த திருவெம்பாவை பாடல்களுடன், திருப்பள்ளியெழுச்சி பாடல்களையும் மார்கழி மாதத்தில் பாடுவதை சைவர்கள் மரபாக கொண்டுள்ளார்கள். 20 பாடல்களிலும் இறுதியில் எம்பாவாய் என்னும் வார்த்தையில் பாடல் முடிவடைகிறது…. ஒவ்வொரு பாடலின் விளக்கமும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது…

 

திருவெம்பாவை பாடல் 1

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை

யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்

மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்

வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து

போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்

ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே

ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்

 

திருவெம்பாவை பாடல் 2

பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்

பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே

நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்

சீசி இவையுஞ் சிலவோ விளையாடி

ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்

கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்

தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்

ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்.

 

திருவெம்பாவை பாடல் 3

முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்

அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்

தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்

பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்

புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே

எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே

சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை

இத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய்

 

திருவெம்பாவை பாடல் 4

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ

வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ

எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்

கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே

விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை

கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்

உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்

தெண்ணிக் குறையில் துயலேலோர் எம்பாவாய்.

 

திருவெம்பாவை பாடல் 5

மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்

போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்

பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்

ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்

கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்

சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று

ஓலம் இடினும் உணராய் உணராய்காண்

ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்

 

திருவெம்பாவை பாடல் 6

மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை

நானே எழுப்புவன் என்றலும் நாணாமே

போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ

வானே நிலனே பிறவே அறிவரியான்

தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்

வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்

ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்

ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்

 

திருவெம்பாவை பாடல் 7

அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர்

உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்

சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்

தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்

என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்

சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ

வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்

என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.

 

திருவெம்பாவை பாடல் 8

கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்

ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்

கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை

கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?

வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்?

ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?

ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை

ஏழை பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய்.

 

திருவெம்பாவை பாடல் 9

முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே

பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே

உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்

உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம்

அன்னவரே எம் கணவர் ஆவார்

அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்

இன்னவகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்

என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.

 

திருவெம்பாவை பாடல் 10

பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்

போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே

பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்

வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்

ஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன்

கோதில் குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்

ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்

ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.

 

திருவெம்பாவை பாடல் 11

மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக்

கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி

ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண்

ஆரழல் போல் செய்யா! வெண்ணீறு ஆடி! செல்வா!

சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா!

ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில்

உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்

எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.

 

திருவெம்பாவை பாடல் 12

ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்

தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்

கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்

காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி

வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்

ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப

பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்

எத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்

 

திருவெம்பாவை பாடல் 13

பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்

அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்

தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்

எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த

பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து

நம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலர்ந்தார்ப்பக்

கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்

பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு ஏலோர் எம்பாவாய்.

 

திருவெம்பாவை பாடல் 14

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்

கோதை குழலாட வண்டின் குழாம் ஆட

சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி

வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி

சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி

ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி

பேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை தன்

பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.

 

திருவெம்பாவை பாடல் 15

ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே

நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்

சித்தம் களிகூர நீரொருகால் ஓவா

நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து

அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்

பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்

ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்

வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி

ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.

 

திருவெம்பாவை பாடல் 16

முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்

என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்

மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்

பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்

என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்

தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு

முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே

என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்

 

திருவெம்பாவை பாடல் 17

செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்

எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்

கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டி

இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்

செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை

அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை

நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ்ந்

பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.

 

திருவெம்பாவை பாடல் 18

அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்

விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல்

கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்

தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகல

பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்

விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி

கண்ணா ரமுதமாய் நின்றான் கழல்பாடி

பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.

 

திருவெம்பாவை பாடல் 19

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று

அங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால்

எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்

எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க

எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க

கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க

இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்

எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.

 

திருவெம்பாவை பாடல் 20

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்

போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்

போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்

போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்

போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்

போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.

 

திருவெம்பாவை பாடல் 1 விளக்கம் :

ஒளி பொருந்திய நீண்ட கண்களை உடைய பெண்ணே! முதலும் முடிவும் இல்லாத காணுதற்கு அரிய பெருமையையுடைய ஒளியானவனை பாடுவதைக் கேட்டும், உறங்குகின்ற னையோ? உன் காது ஓசை புகாத வலிய காதோ?

 

மகாதேவனுடைய நெடிய சிலம்பணிந்த திருவடிகளை நாங்கள் புகழ்ந்து பாடிய வாழ்த்துப் பாடல்களின் ஒலி சென்று, தெருவின் கண் கேட்ட அளவிலேயே, எங்கள் தோழி ஒருத்தி பொருமி அழுது, உடம்பை மறந்து மலர் நிறைந்த படுக்கையின் மீதிருந்து புரண்டு விழுந்து இந் நிலத்தே, ஒன்றுக்கும் ஆகாதவள் போல மூர்ச்சித்துக் கிடந்தாள். (குறிப்பு: பக்குவம் நிறைந்தோர் சிவபெருமானின் திருநாமத்தைக் கேட்டவுடனே தம்மை மறந்து இருப்பர் எனக் கூறப்பட்டது)

 

இது என்ன நிலை பார். அவள் செயல் அவ்வாறிருக்க, எங்கள் தோழியாகிய விழித்தெழாதிருக்கும் உன் தன்மை இந்நிலையோ? அது என்ன! எமது கண்பாவை போன்றவளே! சொல்லுவதை ஏற்பாயாக; ஆய்வாயாக. ((குறிப்பு: இவ்வாறு நகையாடிச் சில கூறியபின், உறங்கிக் கிடந்தவள் எழுந்து வந்து அவர்களுடன் கூடினாள்)

 

திருவெம்பாவை பாடல் 2 விளக்கம் :

சிறந்த அணிகளை அணிந்தவளே! இரவும் பகலும் நாம் பேசும் பொழுது எப்பொழுதும் என் அன்பு, மேலான ஒளிப் பிழம்பான இறைவனுக்கு என்று கூறுவாய். இப்பொழுது அருமை யாகிய படுக்கைக்கே, அன்பு வைத்தனையோ? பெண்களே! சீச்சி நீங்கள் பேசும் நகை மொழிகளில் இவையும் சிலவாகுமோ! என் னோடு விளையாடிப் பழித்தற்குரிய சமயம் இதுதானோ? தேவர்களும் வழிபடுதற்கு நாணுகின்ற தாமரை மலர் போன்ற திருவடியை அன்பருக்குக் கொடுத்தருள எழுந்தருளும் ஒளி உருவன்; தில்லைச் சிற்றம்பலத்து இறைவனுக்கு, அன்பு பொருந்திய நாம் உனக்கு யார்?

 

திருவெம்பாவை பாடல் 3 விளக்கம் :

 

முத்தைப் போன்ற வெண்மையான பற்களை யுடையவளே! நாள்தோறும் எங்களுக்கு முன்னே எழுந்து எதிரே வந்து, எந் தந்தை இன்ப வடிவினன்; அமுதம் போன்றவன் என்று வாழ்த்தி வாய் மிகுதியும் ஊறி, இனிமை பயக்கும்படிப் பேசுவாய். எழுந்து வந்து உன் வாயிற் கதவைத் திறவாய். நீங்கள் இறை வனிடத்தில் பேரன்புடையீர்! இறைவனது பழமையான அடிமை யுடையீர்! ஒழுங்குடையீர்! புதிய அடியவராகிய எங்களது, சிறுமையை ஒழித்து அடிமை கொண்டால், தீமையாய் முடியுமோ? உன் அன்புடைமை வஞ்சனையோ? உன் அன்பு உண்மை என்பதை நாங்கள் எல்லாம் அறிய மாட்டோமோ? மனம் செம்மையுடையவர் நம் சிவபெருமானைப் பாட மாட்டார்களோ? உன்னை எழுப்ப வந்த எங்களுக்கு இவ்வளவும் வேண்டும்..

 

திருவெம்பாவை பாடல் 4 விளக்கம் :

 

ஒளியையுடைய முத்துப் போன்ற பல்லினை உடையாய்! இன்னும் உனக்குப் பொழுது விடியவில்லையா?. அழகிய கிளியின் சொல்லின் இனிமை போன்ற சொல்லினை உடைய தோழியர், எல்லோரும் வந்து விட்டார்களோ? எண்ணிக் கொண்டு, உள்ளபடியே சொல்லுவோம்; ஆனால், அத்துணைக் காலமும் நீ கண்ணுறங்கி வீணே காலத்தைக் கழிக்காதே. தேவர்களுக்கு ஒப்பற்ற அமுதம் போல்வானை, அறம், பொருள், இன்பம், வீடு என்கிற தமிழ் வேதத்தில் சொல்லப்படுகின்ற மேலான பொருளானவனை, கண்ணுக்கு இனிய காட்சி தருவானைப் புகழ்ந்து பாடி, மனம் குழைந்து உள்ளே நெகிழ்ந்து நின்று உருகுவதன் பொருட்டு நாங்கள் எண்ணிச் சொல்லமாட்டோம். நீயே எழுந்து வந்து எண்ணிப் பார்த்து, எண்ணிக்கை குறையுமானால் மீண்டும் போய்த் தூங்குவாயாக.

 

திருவெம்பாவை பாடல் 5 விளக்கம் :

 

திருமால் அறிய முடியாத `பிரமன் காணமுடியாத அண்ணாமலையை, நாம் அறியக் கூடும் என்று, உனக்குத் தெரிந்துள்ள பொய்களையே பேசுகின்ற, பால் சுரக்கின்ற, தேன்போல இனிக்கும் வாயினையுடைய, வஞ்சகீ, வாயிற்கதவைத் திறப்பாயாக. இந்நிலவுல கினரும், வானுலகினரும், பிற உலகினரும் அறிவதற்கு அருமை யானவனது அழகையும், நம்மை அடிமை கொண்டருளிக் குற்றத்தை நீக்கிச் சீராட்டும் பெருங்குணத்தையும் வியந்து பாடிச் சிவனே! சிவனே!! என்று, முறையிடினும் அறியாய், துயில் நீங்காது இருக் கிறாய். இதுதானோ மயிர்ச்சாந்தணிந்த கூந்தலையுடைய உனது தன்மை?

 

திருவெம்பாவை பாடல் 6 விளக்கம் :

 

பெண்ணே! நீ, நேற்று, நாளைக்கு வந்து உம்மை எழுப்புவேன் என்று சொன்ன சொல்லுக்கும், வெட்கப்படாமல், நீ போன திக்கைச் சொல்வாய். இன்னும் பொழுது விடியவில்லையோ?. வானுலகத்தவரும், நிலவுலகத்தவரும், பிறவுலகத்தவரும், அறிதற்கு அருமையானவன் தானாகவே வலிய வந்து எம்மைக் காத்து அடிமை கொண்டருளுகின்ற மேலாகிய, நெடிய கழலணிந்த திருவடியைப் பாடி, வந்தவர்களாகிய எங்களுக்கு, நீ, உன் வாய் திறவாது இருக் கின்றாய். உடலும் உருகப் பெறாது இருக்கின்றாய். இவ்வொழுக்கும் உனக்குத்தான் பொருந்தும். எமக்கும் பிறர்க்கும் தலைவனாய் இருப் பவனை எழுந்து வந்து பாடுவாயாக!

 

திருவெம்பாவை பாடல் 7 விளக்கம் :

 

தாயே! உன் குணங்களில் இவையும் சிலபோலும். பல தேவர்கள் உன்னற்கு அரியவனும், ஒப்பற்றவனும், பெருஞ் சிறப்புடையவனுமாகிய இறைவனைப் பற்றிய, சங்கு முதலியவற்றின் ஒலிகள் கேட்க, சிவசிவ என்று சொல்லியே வாயைத் திறப்பாய். தென்னவனே என்று சொல்வதற்கு முன்பே, தீயிடைப்பட்ட மெழுகு போல உருகுவாய். என் பெருந்துணைவன், என் அரசன், இன்னமு தானவன், என்று யாம் எல்லோரும் வெவ்வேறு விதமாகப் புகழ்ந் தோம். நீ கேட்பாயாக. இன்னமும் உறங்குகின்றனையோ? திண்ணிய மனமுடைய அறிவிலார் போல, சும்மா படுத்திருக்கின்றாயே! தூக்கத் தின் சிறப்புத் தான் என்னென்று உரைப்பது.

 

திருவெம்பாவை பாடல் 8 விளக்கம் :

 

கோழி கூவ, எங்கும் மற்றைய பறவைகள் ஓசையை எழுப்பும்; வாத்தியங்கள் ஏழிசை முறையில் இசைக்க, எவ்விடத்தும் வெண்மையான சங்கமானது முழங்கும்; ஒப்பற்ற மேலான கருணை யுடைய சிவபெருமானது, நிகரில்லாத உயர்ந்த புகழை நாங்கள் பாடினோம். அவற்றை நீ கேட்கவில்லையா? வாழ்வாயாக; இது எத்தகையதான தூக்கமோ? வாயைத் திறக்க மாட்டேன் என்கிறாயே! பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமால் போல இறைவனிடத்தில் அன்புடையவளான திறமும் இப்படித்தானோ? பேரூழியின் இறுதியில் தலைவனாய் நின்ற ஒருத்தனாகிய உமை பாகனையே பாடுவாயாக.

 

திருவெம்பாவை பாடல் 9 விளக்கம் :

 

முற்பட்டனவாகிய பழமையானபொருள்களுக்கும் முற்பட்ட பழமையான பொருளே! பிற்பட்டனவாகிய புதிய பொருள் களுக்கும் புதிய பொருளாகி நின்ற அத்தன்மையனே! உன்னை ஆண்டவனாகப் பெற்ற உன் சிறப்பு மிக்க அடிமைகளாகிய யாங்கள் உன் தொண்டர்களின் திருவடிகளை வணங்குவோம்; அங்கே அவர்களுக்கு உரிமை உடையவர்களாவோம்; அவர்களே எங்கள் கணவராவார்கள். அவர்கள் விரும்பிக் கட்டளையிட்ட வண்ணமே, அவர்கட்கு அடிமையாய் நின்று ஏவல் செய்வோம்; எங்கள் பெருமானே! எங்களுக்கு இம்முறையே கிடைக்குமாறு அருள் புரிவாயாயின் எவ்வகையான குறைபாடும் இல்லாதவர்களாய் இருப்போம்.

 

திருவெம்பாவை பாடல் 10 விளக்கம் :

இறைவன் திருவடிக் கமலங்கள், கீழ் உலகம் ஏழினுக்கும் கீழாய், சொல்லுக்கு அளவு படாதவையாய் இருக்கும்; மலர்கள் நிறைந்து அழகு செய்யப்பட்ட அவனது திருமுடியும், மேலுள்ள பொருள் எல்லாவற்றுக்கும் மேலுள்ள முடிவிடமாய் இருக்கும்; அவன் ஒரேவகையானவன் அல்லன்; ஒரு பக்கம் பெண்ணுருவாய் இருப்பவன்; வேதமுதலாக, விண்ணுலகத்தாரும், மண்ணுலகத்தாரும் புகழ்ந்தாலும், சொல்லுதற்கு முடியாத ஒப்பற்ற நண்பன்; அடியார் நடுவுள் இருப்பவன். அத்தன்மையனாகிய சிவபெருமானது ஆலயத்திலுள்ள, குற்றமில்லாத குலத்தையுடைய, பணிப்பெண்களே! அவன் ஊர் யாது? அவன் பெயர் யாது? அவனுக்கு உறவினர் யாவர்? அவனுக்கு அந்நியர் யாவர்? அவனைப் பாடும் வகை யாது?.

 

திருவெம்பாவை பாடல் 11 விளக்கம் :

நிறைந்த நெருப்புப் போன்ற செந்நிறம் உடைய வனே! வெண்மையான திருநீற்றுப் பொடியில் மூழ்கியவனே! ஈசனே! சிற்றிடையையும், மைபொருந்திய பெரிய கண்களையும் உடைய உமையம்மையின் கணவனே! அழகனே! வண்டுகள் மொய்த்தலைப் பொருந்திய அகன்ற தடாகத்தில், முகேர் என்ற ஒலி எழும்படி புகுந்து, கையால் குடைந்து குடைந்து மூழ்கி, உன் திருவடியைப் புகழ்ந்து பாடி, பரம்பரை அடிமைகளாகிய நாங்கள், வாழ்ந்தோம்; தலைவனே! நீ எங்களை அடிமை கொண்டருளுகின்ற திருவிளையாட்டினால், துன்பத்தினின்றும் நீங்கி இன்பத்தைப் பெறுபவர்கள் அவற்றைப் பெறும் வகைகளை எல்லாம் யாங்களும் படிமுறையில் பெற்று விட்டோம். இனி, நாங்கள் பிறவியில் இளைக்காதபடி எங்களைக் காத்தருள்வாயாக.

 

திருவெம்பாவை பாடல் 12 விளக்கம் :

நம்மைப் பிணித்த பிறவித் துன்பம் ஒழியும்படி, நாம் மகிழ்ந்து ஆடுகின்ற தீர்த்தமாய் உள்ளவன், அழகிய தில்லையின் கண்ணுள்ள ஞான சபையில் அனலேந்தி ஆடுகின்ற கூத்தப்பிரான். விண்ணுலகத்தையும் நிலவுலகத்தையும் நம் எல்லோரையும், தோற்று வித்தும் நிலை பெறுத்தியும், நீக்கியும், விளையாடுபவனாகிய இறை வனது பொருள் சேர் புகழை உரைத்து, வளையல்கள் ஒலிக்கவும், நீண்ட மேகலை முதலிய அணிகள் அசைந்து ஓசை எழுப்பவும் அழகிய கூந்தலின் மேல், வண்டுகள் எழுந்து முழங்கவும் மலர்கள் விளங்குகின்ற பொய்கையில் ஆடி, நம்மை உடைய இறைவனது பொன் போன்ற திருவடிகளைத் துதித்துப் பெரிய மலைச் சுனை நீரில் மூழ்குவாயாக.

 

திருவெம்பாவை பாடல் 13 விளக்கம் :

பசுமையான குவளையின் கருமையான மலர் களை உடைமையாலும், செந்தாமரையின் குளிர்ந்த மலர்களை உடைமையாலும், கையில் வளையற் கூட்டத்தை உடைமையாலும் பின்னிக் கிடக்கின்ற பாம்பினாலும் தங்கள் மலம் கழுவுவார் வந்து நீக்கிக் கொள்ள அடைதலாலும், எம்பெருமாட்டியையும் எங்கள் பெருமானையும் போன்று பொருந்திய நீர் பொங்குகின்ற மடுவை யுடைய பொய்கையில் புகும்படி வீழ்ந்து, மூழ்கி, நம் சங்கு வளையல்கள் கலகலக்கவும் காற்சிலம்புகள் கலந்து ஒலிக்கவும் தனங்கள் பூரிக்கவும், முழ்குகின்ற நீர் பொங்கவும் தாமரை மலர்கள் நிறைந்த நீரில் பாய்ந்து ஆடுவாயாக.

 

திருவெம்பாவை பாடல் 14 விளக்கம் :

காதில் பொருந்திய குழை அசையவும், பசிய பொன்னால் ஆகிய அணிகள் அசையவும் பூமாலை கூந்தலில் இருந்து அசையவும் மாலையைச் சுற்றும் வண்டின் கூட்டம் அசையவும், குளிர்ச்சியாகிய நீரில் மூழ்கித் தில்லைச் சிற்றம்பலத்தைப் புகழ்ந்து பாடி, வேதப் பொருளாகிய சிவபிரானைப் பாடி, அப்பொருள் நமக்கு ஆகும் வண்ணம் பாடிப் பரஞ்சோதியின் தன்மையைப் பாடி, இறைவன் சென்னியில் சூழ்ந்துள்ள கொன்றையைப் பாடி, அவன் ஆதியான தன்மையைப் பாடி, அவன் அந்தமான முறையைப் பாடி, பக்குவமுறைகட்கு ஏற்ப வேறுபடுத்தி, நம்மை ஆக்கமாய வேறுபாடுறுத்தி உயர்த்திய, வளையலை உடைய உமாதேவியின் திருவடியின் தன்மையைப் பாடி ஆடுவாயாக.

 

திருவெம்பாவை பாடல் 15 விளக்கம் :

கச்சணிந்த அழகிய அணியுடன் கூடிய கொங்கை களை உடையீர்! ஒவ்வொரு சமயத்தில், எம்பெருமான் என்று சொல்லி வந்து இப்பொழுது நம்மிறைவனது பெருமையை ஒருகாலும் வாயினாள் கூறுதலை நீங்காதவளாகிய இவள் மனம் மகிழ்ச்சி மிக விழிகளினின்றும், ஒருபொழுதும் நீங்காத நீரின் நீண்ட தாரைகள் ஒழுகப் பூமியின்மேல் ஒருமுறையே வீழ்ந்து எழாது வணங்குவாள். பிற தேவரைத் தான் வணங்கமாட்டாள். பெரிய தலைவனாகிய இறைவன் பொருட்டு ஒருவர் பித்தராகுமாறும் இவ்வாறோ? இவ் வாறு பிறரை அடிமை கொள்ளும் ஞான உருவினர் யார் ஒருவரோ, அவருடைய திருவடியை நாம் வாயாரப் புகழ்ந்து பாடி, அழகிய தோற்றமுடைய மலர்கள் நிறைந்த நீரில் நீர் குதித்து ஆடுவீராக.

 

திருவெம்பாவை பாடல் 16 விளக்கம் :

மேகமே! முதலில் இந்தக் கடல் நீரை உட்கொண்டு, மேல் எழுந்து எம்மையுடையாளாகிய அம்மையினது திருமேனி போல நீலநிறத்தோடு விளங்கி எம்மை அடிமையாக உடையவளது சிற்றிடை போல மின்னி விளங்கி, எம்பிராட்டி திருவடிமேல் அணிந்த பொன்னினால் செய்யப்பட்ட சிலம்பு போல ஒலித்து, அவளது திருப்புருவம் போல் வானவில் விட்டு, நம்மை அடிமையாக உடையாளாகிய அவ்வம்மையினின்றும் பிரிதல் இல்லாத, எங்கள் தலைவனாகிய இறைவனது, அடியார்களுக்கும், பெண்களாகிய நமக்கும், அவள் திருவுளம் கொண்டு முந்திச் சுரக்கின்ற இனிய அருளே போன்று பொழிவாயாக.

 

திருவெம்பாவை பாடல் 17 விளக்கம் :

மணம் பொருந்திய கரிய கூந்தலை உடைய பெண்ணே! சிவந்த கண்களையுடைய திருமாலிடத்தும், நான்முக னிடத்தும், பிற தேவர்களிடத்தும், எங்கும் மற்றவர்களிடத்தும் இல்லாததாகிய, ஒப்பற்ற ஆனந்தம் நம்மிடத்து ஆகும்படி, நம்மைப் பெருமைப் படுத்தி, இவ்வுலகிலே நம் வீடுகள் தோறும் எழுந்தருளி வந்து, செந்தாமரை போன்ற அழகிய திருவடியைக் கொடுத்தருளு கின்ற வீரனை, அழகிய கருணை நோக்குடைய மன்னனை, அடிமை களாகிய நமக்கு அமுதம் போல்வானை, நம் தலைவனைப் புகழ்ந்து பாடி, நன்மைகள் பெருக, தாமரை மலர் நிறைந்த நீரில் குதித்து ஆடுவாயாக.

 

திருவெம்பாவை பாடல் 18 விளக்கம் :

தோழியே! திரு அண்ணாமலை அண்ணலது திருவடித் தாமரையைப் போய் வணங்குகின்ற தேவர்களது முடி யிலுள்ள இரத்தினங்களின் தொகுதி, ஒளி இழந்தாற்போல கண் களுக்கு நிறையும் சூரியன் தனது கிரணங்களுடன் தோன்றின மையால், இருளானது மறைய நட்சத்திரங்கள் குளிர்ச்சி பொருந்திய ஒளி குன்றி ஒழிய அப்போழ்தில், பெண்ணாகியும், ஆணாகியும், அலி யாகியும், விளங்குகின்ற ஒளி பொருந்திய ஆகாயமாகியும் பூமியாகியும் இத்தனைக்கும் வேறுபட்டும் கண்ணால் பருகப்படுகின்ற அமுதமாய் நின்றவனாகிய இறைவனது திருவடியைப் பாடி இப்புது நீரில் வீழ்ந்து ஆடுவாயாக.

 

திருவெம்பாவை பாடல் 19 விளக்கம் :

எங்கள் தலைவனே! உன் கையில், என் குழந்தை அடைக்கலப் பொருளாகும் என்று வழங்கிவரும் அப்பழமொழியைப் புதுப்பிக்கின்றோம் என்று அஞ்சி, உனக்கு ஒரு விண்ணப்பத்தைச் செய்கின்றோம். கேட்டருள்வாயாக. எங்கள் தனங்கள் உன்னடியவர் அல்லாதார் தோள்களைத் தழுவாதிருக்க; எம் கைகள் உனக்கன்றிப் பிறதேவர்க்கு எவ்வகையான தொண்டும் செய்யாதிருக்க; இரவும், பகலும், எம் கண்கள் உன்னையன்றி வேறு எந்தப் பொருளையும் காணாதிருக்க; இந்நிலவுலகில் இம்முறையே எங்கள் தலைவனே! நீ எங்களுக்கு அருளுவாயாயின், சூரியன் எத்திக்கில் உதித்தால் எங்களுக்கு என்ன?.

 

திருவெம்பாவை பாடல் 20 விளக்கம் :

எப்பொருளுக்கும் முதலாயுள்ள உன் திருவடி மலருக்கு வணக்கம்.

எவற்றுக்கும் முடிவாயுள்ள, செந்தளிர் போலும் திருவடிகளுக்கு வணக்கம்;

எல்லாவுயிர்களுக்கும் தோன்றுதற்குக் காரணமாகிய பொன்போன்ற திருவடிகளுக்கு வணக்கம்,

எல்லாவுயிர் களுக்கும் நிலைபெறுதற்குரிய பாதுகாப்பாகிய அழகிய கழலணிந்த திருவடிகளுக்கு வணக்கம். எல்லாவுயிர்களுக்கும் முடிவு எய்துதற்குக் காரணமாகிய திருவடிகள் இரண்டிற்கும் வணக்கம்.

திருமாலும், பிரமனும், காணமுடியாத திருவடித் தாமரை மலருக்கு வணக்கம்.

நாம் உய்யும்படி ஆட்கொண்டருளுகின்ற தாமரை மலர்போலும் திருவடி களுக்கு வணக்கம்.

இங்ஙனம் கூறிப் போற்றி இறைவனை வணங்கி, நாம் மூழ்குவதற்குரிய மார்கழி நீரில் ஆடுவோமாக.

 

This is also known as Thiruvenba or tiruvenbavai songs

=======================================

Courtesy;-- https://aanmeegam.co.in/blogs/lyrics/thiruvempavai-lyrics-tamil-meaning/

===============================================


ஆரார் வந்தார் அமரர் குழாத்தில்
    அணியுடை ஆதிரைநாள்
நாரா யணனொடு நான்முகன் அங்கி
    இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர் குழாங்கள்
    திசையனைத்தும் நிறைந்து
பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும்
    பல்லாண்டு கூறுதுமே. 
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை :

அழகினை உடைய ஆதிரைத்திருநாளில் தேவர் கூட்டத்தில் யாவர்யாவர் தரிசிக்கவந்தனர் எனின், திருமால், நான் முகன், அக்கினி, சூரியன், இந்திரன் முதலியோர் வந்தனர். தேர்ஓடும் வீதியில் தேவர் கூட்டங்கள் நாற்றிசையும் நிறைய, நிலவுலகெங்கும் நிறைந்த சிவபெருமானுடைய பழமையான புகழைப்பாடியும்,அதற்கு ஏற்ப ஆடியும், அந்த ஆதிரைநாளை உடைய அப்பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.


அரியானை அந்தணர்தம் சிந்தை யானை
    அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
    திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
    கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே

==========================




பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு......

எவ்வளவு தகுதி உடையவரும் தம் முயற்சியால் அணுகுதற்கு அரியவன், அந்தணர்களின் உள்ளத்தில் உள்ளவன். மாற்றுதற்கு அரிய வேதத்தின் உட்பொருளாகியவன், நுண்ணியன், யாரும் தம் முயற்சியால் உணரப்படாத மெய்ப்பொருள் ஆகியவன். தேனும் பாலும் போன்று இனியவன். நிலைபெற்ற ஒளிவடிவினன், தேவர்களுக்குத் தலைவன், திருமாலையும் பிரமனையும், தீயையும், காற்றையும், ஒலிக்கின்ற கடலையும்மேம்பட்ட மலைகளையும் உடனாய் இருந்து செயற்படுப்பவன் ஆகிய மேம்பட்டவன். புலிக்கால் முனிவனுக்கு உறைவிடமாகிய தில்லையை உகந்து எழுந்தருளும் அப்பெருமானுடைய மெய்ப் புகழைப்பற்றி உரையாடாத நாள்கள் எல்லாம் பயன் அற்ற நாள்களாம்.

He is the rare One;
He abides in the chinta Of Tillai-Brahmins;
He is the core Of the rare Vedas;
He is the Atom;
He is the Tattva unknown to any one;
He is the Honey,
the Milk,
the self-luminous Light;
He is the King of the celestial lords;
He is the Dark one,
the Four-Faced,
The Fire,
the Air,
the roaring Ocean And the world-supporting Mountain.
He,
the greatest,
is of Perumpatra-p-Puliyur.
Unlived indeed are the days unspent in His praise.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995


ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
In graceful Aadirai day, of the Devas to darshan
Him our Lord were fair Maal, Four-faced, Agni, Sol
And Indra and all. On the car-street
Poured in from four airts Deva-clans riding cars.
May we sing the hoary praise of Lord Civa
Omnipresent on this Pritvi and perform Dance
In accord. May we hail the Lord of Aadirai,
The Betel-Geuse, to abide for Eternal Eons.

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...