Followers

Friday, February 21, 2020




Image may contain: 1 person, standing

அன்புறவுகள்... எல்லோர்க்கும்.... என்றென்றும் அன்புடன்.! இனிய காலை மதிய வணக்கம்! ..உரித்தாகுக
அன்பே சிவம்!  .....பிப்., 21 வெள்ளிக்கிழமை  - மகாசிவராத்திரி

சிவராத்திரி என்பது விழா அல்ல! அது, மனதைக் கட்டுப்படுத்தும் மகாவிரதம். அதனால், இதைக் கொண்டாடுகிறோம் என்று சொல்வதை விட, அனுஷ்டிக்கிறோம் என்று சொல்வதே சரி. சிவராத்திரி என்றால் பட்டினி கிடப்பது, கண்விழிப்பது, குலதெய்வம் கோவிலுக்குப் போவதுடன் நின்று விடாமல், இதன் தத்துவம் உணர்ந்து இவ்விரதத்தை அனுஷ்டித்தால், வாழ்க்கை என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

நம் மனம் சந்திரனின் இயக்கத்தைப் பொறுத்து செயல்படுகிறது. சந்திரன் வளரும் நாட்கள் 15; தேயும் நாட்கள் 15. இதில் தேய்பிறையின், 14வது நாள், அதாவது, அமாவாசைக்கு முந்தைய நாள், சந்திரன் ஏறத்தாழ மறைந்து விடும்.
நம் மனமும் இப்படித்தான்... ஒருநாள், ஒன்றை அடைந்தே தீர வேண்டும் என்ற ஆசை பொங்கும். அடுத்த நாளே, 'அது எதற்கு, அதனால் என்ன பயன்...' என எண்ணி, அந்த எண்ணம் தேய்ந்து போகும். மறுநாளே,'விட்டேனா பார்...' என்று, அதே ஆசையின் மீது லயிக்க ஆரம்பித்து விடும்; இப்படி நிலையில்லாமல் இருப்பது மனம்.

சிவராத்திரியை ஏன் தேய்பிறையின், 14ஆம் நாள் அனுஷ்டிக்கின்றனர் தெரியுமா?

மனித மனம், ஒரு நிலைப் பட தியானம் அவசியம். அலைபாயும் மனதை, சிவத்தின் மீது வைத்து, எங்கும் போகாமல் கட்டிப் போட வேண்டும். அப்படி கட்டிப் போட்டாலும், அமாவாசைக்கு முந்தைய நாள், சந்திரனின் சிறு கீற்றுப் போல, மனதின் ஏதோ ஒரு மூலையில் முந்தைய ஆசை எண்ணங்களின் சிறு வடிவம் புதைந்து தான் இருக்கும். அதையும் ஒழித்தால் தான், நாம் பிறவியிலிருந்து விடுபட்டு சிவனை அடைய முடியும். அதற்காக சிவனை வழிபடும் நாளே சிவராத்திரி.

இந்த தத்துவத்தை உணர்த்தத்தான், சிவனை லிங்க வடிவில் படைத்தனர் நம் முன்னோர். லிங்கத்தின் பாணம் ஏறத்தாழ முட்டையின் வடிவில் இருக்கும். ஒரு முட்டை படம் வரையுங்கள். அதற்கு முதலும் இல்லை, முடிவும் இல்லை. சுற்றிச் சுற்றி போய்க் கொண்டே இருக்கும். அதே போன்றுதான் சிவனும், முதலும், முடிவும் இல்லாதவர். மனிதர்களோ அப்படி இல்லை. நமக்கு பிறப்பு என்னும் முதலும், மரணம் என்னும் முடிவும் இருக்கிறது. இது, நாம் செய்யும் பாவ, புண்ணியத்திற்கேற்ப பல பிறவிகளைத் தருகின்றன.

சிலர் ஏழு பிறவி என்று மனிதர்களுக்கு கணக்குச் சொல்வர். 'எழுபிறவி' என்பதே சரி! நம் பாவக்கணக்கு கரையும் வரை, மீண்டும் மீண்டும் பூமியில் எழுந்து கொண்டே இருப்போம்.

பிறவிச் சூழலில் இருந்து விடுபட ஏதாவது வழியிருக்கிறதா என்றால், இருக்கிறது... அதற்கு ஒரு மந்திர வார்த்தையைச் சொல்லியிருக்கின்றனர் முன்னோர்... அதுதான், 'அன்பே சிவம்!' பிற உயிர்களையும் தம்மை போல கருதி அன்பு செலுத்த வேண்டும். அதற்காக நம்மைத் தயார்படுத்திக் கொள்ளும் நாளே சிவராத்திரி. இந்த விரதத்தை பொருள் உணர்ந்து அனுஷ்டித்து சிவன் அருள் பெறுவோம்!

தி.செல்லப்பா
நன்றி சகோ.
===================================================
சிவாயநம வெனச் சித்தம் ஒருக்கி
அவாயம் அறவே அடிமைய தாக்கிச்
சிவாய சிவசிவ வென்றே சிந்தை
அவாயம் கெட நிற்க ஆனந்தமாமே

திருமூலர் சிவாய நமஎன்று உள்ளத்து வெளியே செல்லாது மனதை ஒருநிலை படுத்தி சொல்லி மலத்தால் ஆன துன்பத்தை நீக்கி, சிவத்துக்கு அடிமையாக்கி, ‘சிவாய சிவ சிவஎன்று பலமுறை சித்தத்தில் எண்ணினால் அச்சம் நீங்க ஆனந்தம் உண்டாகும்

திருச்சிற்றம்பலம்

நமச்சிவாயவே ஞானமுங் கல்வியும்
நமச்சிவாயவே நானறி விச்சையும்
நமச்சிவாயவே நாநவின்றேத்துமே
நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே.

காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நல்நெறிக்கு உய்ப்பது
வேதநான் கினும் மெய்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயமே!

சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிட தீவினை மாளும்
சிவசிவ என்றிட தேவரும் ஆவார்
சிவசிவ என்ன சிவகதி தானே!

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே!

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
=====================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...